படை வீரர்கள் குவிந்தனர் பல்லவனின் புதல்வனை சுற்றி. சிலர் இந்த காரியத்துக்கு காரணமானவனை கையும் களவுமாய் பிடித்தனர்.
மொட்டை தலை. மௌன மொழி பேசும் இதழ்கள். சுற்றி கட்டிய காவி உடை. மண்டையில் முடிதான் இல்லையே ஒழிய – கையில் ஆயிரம் யானை பலம்.
பல்லவன் தன் பிடரியில் கையை வைத்து நாடி நிரம்பெல்லாம் அடங்கி கிடந்தான். சிம்ம வர்மனின் பேரனுக்கே எவனோ வர்மா வித்தை காட்டுகிறான். நேரம் – எல்லாம் நேரம்.
கொஞ்சம் கடினப்பட்டு எழுந்தான் பல்லவ இளவரசன். ஒரு புறம் காலும் ஒரு புறம் கையும் சொல்வது கேட்கவில்லை.
“நீ யார் ?” – பல்லவ இளவரசன் கேட்டான்.
இளம் துறவி எதுவும் சொல்லவில்லை.
“சொல்” – பல்லவ இளவரசன் கர்ஜித்தான்.
இளம் துறவி எதுவும் சொல்லவில்லை.
“இளவரசே! அனுமதித்தால் உங்கள் வலி தீர்க்கிறேன்” – இப்பொது இளம் துறவி வாய் திறந்தான்.
சொன்னபடி வந்தவன் – வலி தீர்த்தான். கழுத்தில் உள்ள வர்ம புள்ளிகளை நீவி விட்டான். அவனுக்கு நித்தி சொச்ச வர்ம புள்ளிகளும் அத்துபடி போல இருந்தது. ஒரு தாய் தன் மகவுக்கு செலுத்தும் கருணை அவன் கண்களில் இருந்தது.
“சொல்! எங்கே அவர் ?” – பல்லவ இளவரசன் கேட்டான்
“அவர் என்றால் ?” – இளம் துறவி பதில் கேள்வி கேட்டான்
“என் சிறிய தந்தை. பல்லவத்தின் அரச குடும்பத்தவர்”
“யாரை கேட்கிறீர்கள்? நீங்கள் ஓய்வெடுங்கள்”
“உன் ஆசிரியரைத்தான் கேட்கிறேன்”"
“என் ஆசிரியரா ?” – இளம் துறவி கேட்டான்
“ஆம்! புத்தி தார பல்லவர் எங்கே ?”
“புத்தி தாரர் இல்லை”
“பொய்”
“பிரசன்னா தாராரும் இல்லை. புத்தி தாராரும் இல்லை”
“பொய்”
“எப்படி அவ்வளவு உறுதியாய் சொல்கிறீர்கள் ?” – சிகிச்சை அளித்தவாறே கேட்டான் அந்த இளம் துறவி.
“உள் மனம் சொல்கிறது”
“என்ன புத்தி தாரரை கொல் என்றா ?”
“புத்த துறவியே! உங்களின் கால்களில் விழுகிறேன். பல்லவரை காண்பியுங்கள்”
“ஒரு சத்தியம் வேண்டும்”
தன் வலது கையை நீட்டினான் இளம் துறவி. இளம் துறவியின் மடியில்தான் பல்லவ இளவரசன் கிடந்தான். படை வீரர்கள், புத்த துறவிகள் எல்லோரும் பார்த்தனர்.
அந்த இளம் துறவியின் கைகள் பஞ்சு மாதிரி இருந்தன.
“என்ன சத்தியம் ?” -இளவரசன் கேட்டான்.
எங்கேயோ இருந்து ஒரு போதி மர இல்லை பறந்து வந்தது. புத்த முனியின் கையில் அமர்ந்தது.
“நான் இந்த புத்த முனிவர்களை காக்க சத்தியம் கேட்க மாட்டேன் “
“பின்”
“அவர்களுக்கு என் ஆசிரியர் தற்காப்பு கலை கற்று தந்து உள்ளார்”
“என்ன சத்தியம் வேண்டும் ?”
“தர்மர் கிளம்ப உள்ளார். அதற்கு முன் அவரை வந்து பாருங்கள்”
“தர்மரா ? அவர் யார்?”
கைகளில் சத்தியம் விழுவதாய் இல்லை. அரசியலில் வாக்கு தந்து வாழ்க்கை அறுக்க பல்லவனுக்கு தெரியாது.போதி இலை எழுந்து நின்றது. மீண்டும் பறக்க எத்தநிதது.
பல்லவன் இளம் முனியின் கையில் சத்தியம் வைத்தான். தூறியது.மின்னல் வெட்டியது. வீரர்கள் அமைதியாய் எல்லாம் பார்த்த்தனர்.
பல்லவ இளவரசன் எழுந்து நின்றான் -இளம் துறவியின் துணையோடு.
“தர்மர் யார் ? அவரை நான் ஏன் பார்க்க வேண்டும் ?” – பல்லவ இளவரசன் கேட்டான்.
விழியோடு விழி நோக்கினான் இளம் துறவி.
புத்தம் சரணம்.
தொடரும்