காஞ்சியில் இருந்து தன் பயணத்தின் முதல் அடியை தர்மர் வைத்தார். விண்ணை பார்த்தார். கதிரவன் கடவுளாய் தெரிந்தாலும் தூக்கம் கொள்ள ஆரம்பித்த நேரம்.
தன்னுடன் துணைக்கு அருகனை வைத்துகொண்டு நடந்தார் தர்மர். வைகறை வானம் வழி காட்ட கிளம்பினார்கள்.
ஓடி வந்தான் இளம் துறவி.
“தர்மரே! சைவர்கள் படை நிற்கிறது” – இளம் துறவி சொன்னான்.
“விழிப்புடனே உள்ளேன்”
“நான் கூட வரவா ?” – இளம் துறவி கேட்டான்.
“வேண்டாம் … இது நான் நடந்த மண். இந்த மண்ணில்தான் அமிதாப புத்தரின் ஒரு பிறவி இருந்தது. அவளோகதீச்வரன் அருள் உண்டு நமக்கு”
“நீங்கள் இந்த சால்வையில் உங்களை மூடிகொள்ளுங்கள்” – இளம் துறவி ஒரு சால்வையை கொடுத்தான்
“மாருவேடமோ ?” – தர்மர் கேட்டார்
“உங்கள் தாடி உங்களை காப்பாற்றும்” – இளம் துறவி புன்னகைத்தான்.
போதி தர்மத்தை சார்ந்தவர்கள் தாடி வைப்பதில்லை.
“திருநீறும் இட்டு உள்ளேன்” – தர்மர் சொல்லிவிட்டு புன்கைத்தார்.
“திருநீறு மிக சிறந்த நோய் நீக்கி. அதுவும் குளிருக்கு இது தேவை. குதிரை வண்டியில் செல்லுங்கள்”
“சரி”
துறவிகள் வழி அனுப்ப தர்மர் தன் பயணத்தை தொடங்கினார். காஞ்சி மண்ணில் இருந்து சேரமான் நோக்கி செல்வதை அவர்கள் திட்டம். காஞ்சி மண்ணில் தருமரிடம் வர்ம கலை கற்ற சிலர் அங்கு உள்ளனர்.
பல்லவ மண்ணில் குதிரை அடி அளந்தது. எதிரே குதிரை ஒன்று வேகமாய் வந்தது.
“நிறுத்தப்பா – உள்ளே யார் ?” – குதிரை ஒட்டிய அருகனிடம் கேட்டான் அந்த வீரன்.
“துறவி”
“புத்த துறவியா ?”
“போதி தர்மத்தை சார்ந்த யாரும் இல்லை”
“பின்னர்?”
“சிவனடியார்”
வீரன் பின் பக்கம் வந்தான். வழுக்கை தலை – அந்நாள் தாடியுடன் தர்மர் புன்னகைத்தார்.
“சைவரா?”
“திருநீறு இட்டு உள்ளேன். சித்தன்” – தர்மர் சொன்னார்
“நல்லவேளை புத்தன் இல்லை” – வீரன் சொன்னான்
“செல்லலாமா ?” – அருகன் குரல் எழுப்பினான்
“இறப்பா — தங்கள் திருநாமம் என்னவோ ?”
“போகன்”
“எல்லோரும் போகிறவர்கள் தான். சரி நீங்கள் செல்லலாம்”
படை வீரர்கள் அலைந்து கொண்டு இருந்தனர். குதிரைகள் திரிந்தன. காஞ்சி மண்ணை கடந்தனர். அவர்கள் பெலம்பகம் போவதற்குள் நிறையவே கடினம் இருக்கும்.
இன்னொரு இடத்தில் அவர்கள் நிறுத்தப்பட்டனர்.
“நீங்கள் பல்லவர் தானே ?” – நிறுத்திய வீரன் கேட்டான் தருமரிடம் கேட்டான்.
அருகனுக்கு பயம் தொற்றிகொண்டது. வியர்வை முத்துக்கள் முகத்தில் துளிர்த்தன. அருகன் அந்த வீரனை பார்த்தான். எங்கே நிற்கிறோம் என்றும் பார்த்தான். நெஞ்சடைத்தது.
தர்மரின் முகம் பார்த்தான். பயம் அவர் முகத்தில் இல்லை. பனி விழுந்து கொண்டு இருந்தது. கடவுளே காப்பாற்று. வானம் நோக்கி மனசுக்குள் இறைஞ்சினான்.
“அட! கேட்கிறேன் இல்லையா ? நீங்கள் பல்லவர் தானே ?” – அந்த வீரன் மீண்டும் தன் ஆண்மைத்தனமான குரலில் கேட்டான்.
பயம் பாய் விரித்தது. சம்மணம் இட்டு அமர்ந்தது. அருகா நலமா என்றது. தர்மர் புன்னகைத்தார் பயத்தை பார்த்து.
புத்தம் சரணம்!
தொடரும்